“வலதுசாரியான பாஜக தமிழகத்தில் வேரூன்றிவிட்டது” - துரை வைகோ நேர்காணல்

By செ.ஆனந்த விநாயகம்

திமுக நிழலிலேயே பயணிக்க மதிமுக முடிவு செய்துவிட்டதா? - கட்சியை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபுறம் கிராம அளவில் பாஜக போன்ற மதவாத சக்திகள் பரவலாக உள்ளன. இது வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக கடந்த கால கசப்புகளை மறந்து கூட்டணியில் பயணிக்கிறோம்.

அப்படியெனில் பாஜக வளர்ச்சியடைந்துவிட்டது என கருதலாமா? - தமிழகத்தில் பாஜக வேரூன்றியிருக்கிறது. மேலும் வளர்ந்துவிடக் கூடாது. பாஜக போன்ற வலதுசாரிசக்திகள் அனைத்தும் வைரஸ் போன்றவை. வேகமாக பரவும். ஓரளவு வளர்ந்துவிட்டால் அதை தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மதிமுகவுக்கு, ஒரு தொகுதியை பெறுவதில் ஏன் இவ்வளவு தாமதம்? - தாமதம் எதுவும் இல்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவதற்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இதுதொடர்பாக தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். 10 ஆண்டு கழித்து மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி. நாங்கள் எதையும் இழக்கவில்லை.

தேர்தலில் போட்டியிடுவீர்களா? - எனக்கு போட்டியிட விருப்பமில்லை. ஆனால், கிடைத்த பதவிகளைத் தவறவிட்டு கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகும் வகையில் தலைவர் செய்த தவறுகளை செய்ய வேண்டாம் எனவும் நிர்வாகிகள் சொல்கின்றனர். கூட்டணி தலைமையும் நான் போட்டியிட விரும்புகிறது.

மதிமுகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தங்களது திட்டம் என்ன? - தலைவரின் பேச்சுத் திறன் எனக்கு கிடையாது. ஆனால் என் மீது நம்பிக்கை கொண்டவர்களிடம், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பாதையில் செல்ல முடியும் என கூறியுள்ளேன். மதுரை மாநாடு, சென்னை இளையோர் பயிலரங்கம் போன்றவற்றில் திரண்ட கூட்டம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE