நடிகை கவுதமி நில அபகரிப்பு புகார்: கட்டுமான நிறுவன தலைவரின் மனைவி, மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் அழகப்பனின் மனைவி மற்றும் அவரது மருமகளுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கவுதமி, தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துக்களை வாங்கிய நிலையில், 2004-ம் ஆண்டில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அந்த சொத்துக்களை விற்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சி.அழகப்பன் என்பவரை பவர் ஆஃப் அட்டர்னியாக நியமித்திருந்தார்.

அதன்படி 2004-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை கவுதமி பெயரிலும், தனது மனைவி நாச்சாள் பெயரிலும் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரில் அழகப்பன், நாச்சாள், இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் பாஸ்கர், ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அழகப்பனின் மனைவி நாச்சாள் மற்றும் மருமகள் ஆர்த்தி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நாச்சாளின் உடல் நலனை கருத்தில் கொண்டும், மருமகள் ஆர்த்திக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருப்பதைக் கருத்தில்கொண்டும் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்கு, கவுதமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விசாரணை தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 5-ம் தேதி தாக்கல் செய்யவும், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE