மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சிவகாசி விஸ்வநத்தத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
நான் விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்.
2013-ல் அதிமுக ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவர் விடுதலையாகி விட்டார்.
விசாரணை சரியாக நடந்திருந்தால் அப்போது அவரை விடுதலை செய்திருக்க முடியாது. அப்போது ஜாபர் சாதிக்குக்கு ஆதரவாக, தற்போதைய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் ஆஜரானார். போதைப் பொருள் கடத்தல் குறித்து பேச அதிமுக, பாஜகவுக்கு தகுதி இல்லை என்று கூறினார்.