புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடியை குற்றவாளி என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ல் இருவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் மாதம் இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் மனு சிங்வியும், விசாலாட்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும் ஆஜராகி வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொன்முடியை குற்றவாளி என அறிவித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இருவருக்கும் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டு, விசா ரணையை தள்ளிவைத்தனர்.