தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோத கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடிக் கம்பங்களை நட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் கொடி கம்பங்கள் நடுவது, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்து , தங்களது அரசியல் மேடையாக பயன்படுத்துகின்றன.

சென்னை - தடா, கோயம்பேடு - மதுரவாயல் உள்பட மூன்று பகுதிகளில் 40 சட்டவிரோத கொடிகம்பங்கள் உள்ளன. மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை இடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 சட்டவிரோத கொடிக்கம்பங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 சட்டவிரோத கொடி கம்பங்களும் இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளித்துள்ளது. எனவே, இந்த சட்டவிரோத கொடிகம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், 45 இடங்களில் 89 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக வழக்கின் விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை வழக்கில் சேர்ப்பதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE