காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை (மார்ச் 10) கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி(43), கிளிஞ்சல்மேடு பி.சுந்தரமூர்த்தி(44) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களுடன் தமிழகப்பகுதியான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த கூழையார் எஸ்.காளிதாஸ்(34), ஏ.ஸ்ரீராம்(24), தரங்கம்பாடி பி.ஆனந்தபால்(50), பெருமாள்பேட்டை ஆர்.புலவேந்திரன்(42), கே.கவியரசன்(34), ஏ.சிங்காரம்(33), புதுப்பேட்டை ஆர்.மதன்(25), ஆர்.அன்புராஜ்(39), ஆர்.ராஜ்குமார்(23), புதுப்பேட்டை வி.கிஷோர்(29), பொன்னாந்திட்டு எஸ்.நவீன்(22), செருதூர் சி.நவீன்குமார்(18), நாகப்பட்டினம் எஸ்.செந்தில்(35) ஆகிய 15 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 15 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.