சட்டக்கல்லூரி மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம், கடந்த 2022 ஜன.12 அன்று இரவு 11 மணியளவில் தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த போலீஸார் அவர் மாஸ்க் போடவில்லை எனக் கூறி ரூ.1500 அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், லாக் - அப்பில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதை போலீஸாருக்குத் தெரியாமல் அப்துல் ரஹீம் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு அப்துல் ரஹீமை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் 9 பேர் மீது, நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2 போலீஸாருக்கு எதிராக மட்டும் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி, குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில், தன்னை தாக்கிய போலீஸார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் அப்துல் ரஹீம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, தன்னை தாக்கிய போலீஸ்ஸாருக்கு எதிராக மனுதாரர் அளித்த புகார் மீதான வழக்கை போலீஸார் முடித்து வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

வழக்கு முடித்து வைப்பு: அதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பெயர்களை, வழக்கை விசாரணை நடத்திய அதிகாரியே முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கையும் முடித்து வைத்துள்ளார். வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கை வரும் முன்பாகவே அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரின் செல்போன் பதிவுகள் தடய அறிவியல் துறையின் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் உள்ள வீடியோ பதிவுகள் பென் - டிரைவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதைக்கூட விசாரணை அதிகாரி கவனத்தில் கொள்ளவில்லை. குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸாரைக் காப்பாற்றும் நோக்கிலேயே விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். உண்மையி்ல் அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அவர் சிறிதும் முயற்சி செய்யவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றுகிறேன்.

அண்ணா நகர் போலீஸ் துணை ஆணையர், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி கூடுதல் டிஜிபியிடம் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை ஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரிக்க டிஜிபி உத்தரவிட வேண்டும். அவர் இந்த வழக்கை 3 மாத காலத்துக்குள் விசாரித்து அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். அதுபோல மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவி்ட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE