மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கவும், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும் திமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் மதிமுக தெரிவித்திருந்தது.
ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், மதிமுகவின் கோரிக்கையை ஏற்க திமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இன்று தொகுதி பங்கீடு உடன் படிக்கை கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக மதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, மதிமுக நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.