அதிமுகவில் விருப்ப மனு அளித்தோரிடம் மார்ச் 10, 11-ல் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள உறுப்பினர்களுக்கான நேர்காணல், வரும் மார்ச் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள உறுப்பினர்களுக்கான நேர்காணல் எம்ஜிஆர் மாளிகையில், மார்ச் 10 ஞாயிற்றுக் கிழமை, மார்ச் 11 - திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். அன்று பகல் 2 மணிக்கு, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.

மார்ச் 11-ம் தேதி திங்கள்கிழமை 9.30 மணிக்கு பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான நேர்காணலும், பகல் 2 மணிக்கு, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணலும் நடைபெறும்.

அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; கட்சியின் பொதுச் செயலாளருக்காகவும் விருப்ப மனு அளித்துள்ள கட்சியினர் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் கழகத்துக்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

கட்சியின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE