தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில் சேவை: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, முக்கிய இணைப்புப் பகுதியாக இருக்கும் வேளச்சேரி - தாம்பரம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் லைட் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த, கடந்த 2019-ம் ஆண்டு முடிவு செய்து, சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயக்கம் காட்டியது.

இந்நிலையில், தாம்பரம் – வேளச்சேரி, வேளச்சேரி – கிண்டி இடையேமெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மீண்டும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த சிஸ்ட்ரா எம்.வி.ஏ. கன்சல்டிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் வழித்தடங்களை இணைக்கும் போதுதான், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த நோக்கத்திலேயே புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தாம்பரம் - வேளச்சேரி, வேளச்சேரி - கிண்டி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, அங்குள்ள பிரதான சாலையை ஒட்டியே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

அடுத்த 3 மாதங்களில் இந்தப் பணி முடிந்தவுடன், இந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழகஅரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமேவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE