கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து அப்பகுதி மக்கள், 5 வட மாநில இளைஞர்களை தாக்கியும், ஆட்டோக்களை உடைத்தும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி பகுதிகளில் வடமாநில குழந்தை கடத்தும் கும்பல் சுற்றித் திரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவியது. இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 வடமாநில இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது செம்படமுத்தூரில் இருந்து எண்ணேகொள் நோக்கி சென்ற பெண்ணிடம் இருந்து குழந்தையை பறிக்க முயன்றதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் 3 இளைஞர்களை கடுமையாக தாக்கினர். அவர்கள் வந்த ஆட்டோவையும் அடித்து உடைத்தனர். இளைஞர்கள் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது.
இதனால் பெத்தாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதேப்பட்டி சாலை அருகே சென்ற ஒரு வடமாநில இளைஞர், துறிஞ்சிப்ட்டி அருகே நடந்து சென்ற வடமாநில இளைஞரையும் பொதுமக்கள் குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து தாக்கினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் படுகாயம் அடைந்த இளைஞர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதே போல், குழந்தையை வடமாநில இளைஞர் கடத்துவதை தடுத்தபோது தன்னை தாக்கியதாக கூறி, அக்குழந்தையின் தாய் சவுமதி(25) என்பவரும் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணையில், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிந்த 5 பேரும் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை பொறுக்கி, அதில் வருமானம் பெற்று வந்ததும் தெரிந்தது.
» புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை - எஸ்.பி தலைமையில் தனிப்படை
» நயினார் நாகேந்திரன் Vs சரத்குமார் - நெல்லை தொகுதியின் அரசியல் கணக்கு என்ன?
பொதுமக்கள் நம்ப வேண்டாம்: இது குறித்து எஸ்பி தங்கதுரை கூறுகையில், “குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி வரும் தகவல்கள் தவறு. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தியதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி சந்தேகப்படும் நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும். தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தேவை இன்றி வட மாநில தொழிலாளர்கள், இளைஞர்கள் தங்களது பணியிடத்தை விட்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
விழிப்புணர்வு இல்லை: இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்பட்டி பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் போலியானது என கூறிய மாவட்ட காவல்துறை, இதுகுறித்து கிராமபுறங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இதே போல், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கட்டுமானம் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் வேலை முடித்துவிட்டு சந்தேகத்திற்கிடமாக வெளியே சுற்றி திரிவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை. இதன்காரணமாக வதந்தி மற்றும் மொழி புரிதல் இல்லாத காரணமாக வடமாநில தொழிலாளர்களை பொதுமக்கள் தாக்கி உள்ளனர்.
இருப்பினும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்கள் குழந்தைகள் கடத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என்பதை போலீஸார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய விழிப்புணர்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும்” என்றனர்.