தொகுதிப் பங்கீடு: விசிக, மதிமுகவுக்கு திமுக அழைப்பு

By செய்திப்பிரிவு

தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிக்க, இன்று விசிக, மதிமுகவுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சிகளின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில், கூடுதலாக ஒரு தொகுதியை கேட்பதுடன், தங்கள் சின்னத்திலேயே போட்டியிடவும் விரும்புகின்றன.

மதிமுக, இறுதியாக ஒரு தொகுதிக்கு ஒப்புக் கொண்டாலும், கூடுதலாக மாநிலங்களவை தொகுதி தர வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால், அடுத்தடுத்து சில முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் இரு கட்சிகளும் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளைக்குள் (மார்ச் 7) தொகுதி பங்கீட்டை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்று மதிமுக, விசிக கட்சிகளை அழைத்து பேசி பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரண்டு கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, நாளை காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE