கணவரை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்ததால் 7 குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு @ விருதுநகர்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: கணவரை இழந்த இளம் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததால், 7 குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது மேலபெத்துலுபட்டி. இங்கு 70 குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தைச் சேர்ந்த குஞ் சலையா என்பவருக்கும், சவுந்தர பாண்டி என்பவரது தங்கை பரமேஸ் வரிக்கும் 9.3.2017-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 4 நாட்களில் 13.3.2017 அன்று திடீரென குஞ் சலையா உயிரிழந்தார். இதனால், தனது அண்ணன் சவுந்தரபாண்டி வீட்டில் பரமேஸ்வரி வசித்து வந்தார். அதன் பின்னர், கணவரை இழந்த பரமேஸ்வரிக்கும், தூத்துக்குடி மாவட்டம் பேரிலோவன்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என் பவருக்கும், 17.9.2023 அன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தங்கைக்கு மறுமணம் செய்து வைத்ததால் கிராமத்தில் சிலர் ஒன்று கூடி, சவுந்தரபாண்டி மற்றும் அவரது உறவினர்களான முனியசாமி, முருகன், முனியாண்டி, பெத்தமுத்து, ஜக்கமுத்து, பெத்தலு ஆகிய 7 பேரின் குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 7 குடும்பத்தினரும் நேற்று விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தங்கைக்கு மறுமணம் செய்து வைத்ததால், எங்கள் 7 குடும்பங்களையும் ஊர் பெரியவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால், நாங்கள் வேலைக்குச் செல்லவோ, தொழில் செய்யவோ முடியவில்லை. யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள். மளிகைக் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கிறார்கள். திருவிழாவிலும் அனுமதிக்க மறுக்கிறார்கள். டீ கடைகளில் கூட எங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, சமூக புறக்கணிப்பு செய்யும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE