தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது: தற்போது மிகவும் குறைவான அளவே துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர். விரைவில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 5 பேர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அந்த வகையில், 3.32 லட்சம் பணியளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாகவும், அதன்பின், வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும். அதன்பின், மீண்டும் சரிபார்க்கும் பணி நடைபெறும். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு இடத்தில் மின்னணு இயந்திரம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.