குற்றவாளிகள் வேறு நீதிமன்றத்தில் சரண் அடையும் விவகாரம்: நெறிமுறைகளை வகுக்கும் உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை - வண்டலூரில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஆயுதங்களால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மொத்தம் 9 பேர் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், கொலை குற்றவாளிகள் கொலை நடந்த பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடையாமல் வேறு நீதிமன்றத்தில் சரண் அடைவது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்றும், அசல் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் சிக்கல் எழும் என்றும் அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனால் இதனை நெறிமுறை செய்ய வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சில வழக்குகளையும் அவர் உதாரணமாக நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதில் உரிய வழிகாட்டு நெறிமுறை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். வரும் 8-ம் தேதி இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் குற்றவாளிகளின் சரணை ஏற்று இருக்க கூடாது என அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், இது போன்ற செயலை எல்லை வரம்புக்குள் வராத நீதிமன்றங்கள் ஊக்குவிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE