சென்னை: பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பாஜக சார்பில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (4ம் தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் (மாலை 5 மணி) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.விபட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்துக்கு தடை: பிற்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள், ‘ மத்தியகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி), அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகிய சாலைகள் தடை செய்யப்படும்.