வன விலங்குகளின் தாகத்தை தணிக்க வனத்துறை நடவடிக்கை @ மேட்டூர்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகத்தை தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சேலம் வனக்கோட்டத்தில் மேட்டூர், டேனிஷ்பேட்டை, ஏற்காடு, சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, வாழப்பாடி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இதில் மேட்டூர் வனச்சரகம், ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகம் மற்றும் கர்நாடக மாநில வனச்சரகத்தை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, காட்டெருமை, குரங்கு, மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. கோடை காலங்களில், உணவு மற்றும் தண்ணீருக்காக தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு மற்றும் காவிரி ஆறு பகுதிகளுக்கும், எல்லையோர கிராமங்களுக்கும் இடம் பெயருவது வழக்கம்.

தற்போது, கோடை காலத்துக்கு முன்பே வெயில் தாக்கம் காரணமாக, வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்தும், நீர்நிலைகள் நீரின்றி வறண்டும் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, யானைகள் தண்ணீர் தேடி பாலாறு பகுதிக்கு வருகின்றன. ஆனால், நீரின்றி வறண்டு காணப்படுவதால் கிராமத்துக்குள் நுழைகின்றன. இதனை தடுக்க மேட்டூர், சென்னம்பட்டி வனச்சரக ஊழியர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, வன விலங்களின் தாகத்தை தணிக்க, வனப்பகுதியில் அமைத்துள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "ஈரோடு சென்னம்பட்டி, கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி, ஈரோடு வனச்சரகத்தையொட்டியுள்ள பகுதிகளுக்கு வருகின்றன. குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வனப்பகுதியில் உள்ள செயற்கை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகிறோம். கோடைக் காலம் முடியும் வரையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் வேலிகள் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதேபோல, வனப்பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை உள்ளிட்ட பயிர்களை விரைந்து அறுவடைசெய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது", என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE