சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் மெட்ரோ ரயில் சேவை

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக, கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

44 ரயில் சேவைகள் ரத்து: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக, 44 ரயில் சேவைகள் இன்று ( மார்ச் 3 ) ரத்து செய்யப்பட உள்ளன. இதன் காரணமாக, பயணிகளின் வசதிக்காக, கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்க சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையும் மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். இந்த மாற்றம் இன்று ( மார்ச் 3 ) மட்டும் பொருந்தும். இந்தத் தகவல் மெட்ரோ ரயில் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்: இதேபோல், மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் வழித் தடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வழித் தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித் தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க மாநகரப் போக்கு வரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE