இலங்கை கடற்படை விடுவிக்காத தலா ரூ.1 கோடி மதிப்பிலான 11 மீன்பிடி படகுகள்: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம் 

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: இலங்கை கடற்படையால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவப் படகுகளை மீட்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இப்படகுகள் தலா ரூ.1 கோடிக்கு மேல் விலையுள்ளவை என்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடித விவரம்: 'புதுவை மாநிலத்தில் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எதிர்பாராதவகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத் துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. ஆனால், காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.

கடந்த 2019 வரை பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. ஆகவே, அப்படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. மோட்டார் பொருத்தப்பட்ட இப்படகுகளை விலை உயர்ந்தவை.

குறிப்பாக, ஒவ்வொரு படகும் தலா ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவை. இதனால், மீனவர் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்டு, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE