கடலூர் திமுக எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூர் திமுக எம்.பி மீதான கொலை வழக்கின் விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டையைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கில் எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை சிபிசிஐடி, போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை. சாட்சிகள் மிரட்டப்படுவதாக
கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. மேலும் வழக்கை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்வேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஆறு மாதத்தில் ஒரு சாட்சியைக்கூட, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வில்லை. எனவே வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.

அப்போது, காவல் துறை தரப்பில் வழக்கின் விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறைக்கு மேலும் 6 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE