பழநி: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பழநியை அடுத் துள்ள வயலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முக ராஜ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் அப்பன் கருப்புசாமி முன்னிலை வகித்தார். இதில், அதிமுக மாநிலப் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: சமீபத்தில், டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடைய 3 பேரில் ஒருவர் திமுகவை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் உதயநிதி ஸ்டாலின் மனைவியுடன் சேர்ந்து திரைப்படம் எடுப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் நிலவுகிற காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றன. இதுபற்றி எந்த அரசுகளும் கவலைப்படுவதில்லை. இதை உணர்ந்து தான் மதவாத, மத வெறி பிடித்த கட்சியான பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது என்றார்.