திருப்பூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா’ திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 108 நாட்கள் நடந்த இந்த நிகழ்வில், 234-வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் அண்ணாமலை பேசியதாவது:
வேல் யாத்திரை 4 எம்எல்ஏக்களை கொடுத்தது. `என் மண் என் மக்கள்' யாத்திரை 40 எம்.பி.க்களை கொடுக்கப்போகிறது. பாஜகவில் மற்ற கட்சிகளை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணையும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறலாம்.
பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர்,பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவார்கள் என்று அதிமுக எம்எல்ஏ அம்மன்அர்ச்சுணன் கூறியிருக்கிறார். அவர்கள் யார் என்பதை, அவர்தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தொடர்ந்து, மாதப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் சரித்திரம் நிகழும் நேரத்தில் இருக்கிறோம். இன்னும் 60 நாட்களில் பிரதமர் மோடி 400 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பார். இதற்காக நாம் 60 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.