செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் புதன்கிழமை (பிப்.28) காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 14, 15 மற்றும் 21-ம் தேதிகளில் நடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் கடந்த பிப்.21-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE