கோடை காலத்தில் ரூ.48 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்ய திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆவின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: பால் உற்பத்தியாளர் களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு, ரூ.3 ஊக்கத் தொகைஅறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது வரை சுமார் ரூ.36 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 10,785 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களைக் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற சங்கங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குறித்த நேரத்தில் 7,338 சங்கங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 15,752 விவசாயிகளுக்கு ரூ.102 கோடி கடன்வழங்கப்பட்டு புதிய கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 20 சதவீதம் புரதச் சத்துமிக்க மாட்டுத் தீவனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, கிலோவுக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு ரூ.48 கோடிஅளவுக்கு மோர், தயிர், ஐஸ்கிரீம் போன்ற பால்உப பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.39.40 கோடி அளவுக்கு பால் உபபொருட்கள் விற்பனையாகின. ஆவின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம், வரும் காலங்களில் பால் கொள்முதல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆவின் குடிநீர் விற்பனை தொடர் பாக விரைவில் முடிவெடுப்போம். ஆவின் பார்லர்களின் கட்டமைப்பு களைப் புதுமையான முறையில் நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது குறித்தும் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE