பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி: அடிக்கல் நாட்டிய ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

குப்பம்: பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில்தான் புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.

இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது.

இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.

இதனிடையே, பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்

அதேபோல், “தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE