தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் தந்தை சா. பெருமாள்சாமி (94). தாயார் தங்கமணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்த நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை பெருமாள் சாமி உயிரிழந்தார்.

அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE