புகையிலை விற்பனை செய்த 7,693 கடைகளுக்கு சீல்: ககன்தீப் சிங் பேடி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தமிழகத்தில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்துநடந்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவு பாதுகாப்பு துறையினர் ஒருங்கிணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, 2023 நவ.1-ம் தேதி முதல் இதுவரை புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 39,359கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து ரூ.6.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE