கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்: விசாரணைக் குழு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக ஐகோர்ட் வேதனை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை கலாஷேத்ரா அறக்கட்டளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ராவுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பத்தகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது. சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற அக்குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE