எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி டெண்டர் முறைகேடு புகார்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்யும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ கடந்த 2019-ம் ஆண்டில் டெண்டர் கோரியது.பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒதுக்கிய டெண்டரை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23-ம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது.

பின்னர் அதே டெண்ரை 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிஜிஆர் நிறுவனத்துக்கே ஒதுக்கியது. இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருக்கிறது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பிஜிஆர் எனர்ஜி என்பது பினாமி நிறுவனம் அல்ல. பல திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. மேலும் ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் பிஜிஆர் எனர்ஜிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட்டுள்ளார். முந்தைய ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்ததற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE