பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ சட்டப்பேரவை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும், கலைஞர் புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன.

எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE