மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் வலியுறுத்தி வாங்கித்தர வேண்டும்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலையும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியையும் பெற்று தர வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக நேற்று நடந்த விவாதம்:

அமைச்சர் தங்கம் தென்னரசு: கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் தாமதம் செய்கிறது. நிதியும் தருவதில்லை. ரூ.69,000 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் மாநில அரசு முழுவதும் சொந்த நிதியில் இருந்து செலவிட்டு வருகிறது. இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் ஒப்புதலையும், நிதியும் பெற்றுத் தரவேண்டும்.

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: சென்னை, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்கினால் நிச்சயம் உதவி செய்ய தயாராக உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எவ்வித அரசியலும் பார்க்காமல் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவே இருக்கிறாம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: இணைந்து பணியாற்ற எங்களை அழைத்தற்குப் பதிலாக உங்கள் முன்னாள் நண்பர்களை (அதிமுக) அழைத்திருந்தால் அவர்கள் முன்வந்து இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE