உலகத் தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் ‘தமிழ்’: முதல்வர் ஸ்டாலின் பெருமித ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்” என உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ். ’தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?’ எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.

பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE