அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று, காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித் துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.பி. ரஞ்சன்குமார், முத்தழகன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, அடையாறு துரை ஆகியோர் ஏற்பாட்டில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந் தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: மாநில கட்சிகளை ஒடுக்குகிறது எங்கெங்கெல்லாம் பாஜக ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் அந்த மாநில கட்சிகளை ஒடுக்குவது, பிள்ளை பிடிப்பவர்கள்போல் எம்.பி, எம்எல்ஏக்களை பிடிப்பது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த நாட்டை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கிழக்கு இந்திய கம்பெனியை வெளியேற்ற வேண்டும். இந்த நாட்டு மக்கள் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று போராடினர்.

நாட்டின் விடுதலைக்கும், மோடிக்கும், பாஜகவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?இந்த நாட்டு விடுதலை போராட்ட வீரர்கள் யாராவது பாஜக, ஆர்எஸ்எஸ்-ல் இருக்கிறார்களா? நாட்டின் விடுதலைக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், எந்த ஒரு அர்ப்பணிப்பும் இல்லாமல், எந்த களப்பணிக்கும் செல்லாமல் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் பாஜக அரசு.

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, எதற்காக காங்கிரஸ் வங்கிக் கணக்கை முடக்குகிறது. திருட்டும், புரட்டும் ஒரு நாள் விடியும். நீண்ட நெடிய நாட்கள் ஏமாற்ற முடியாது. பிரதமர் மோடிக்கு அரசியலில் இருந்து விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். மோடிக்கு இதுதான் கடைசி ஆட்சி. வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கியதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.படம்: ம.பிரபு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE