2009-ல் போலீஸாரால் தாக்கப்பட்ட நாள்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸாரால் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட கருப்பு நாளை முன்னிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி, கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வோர் ஆண்டும் பிப்.19-ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கச் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று போலீஸாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸாரைக் கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரியும் அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE