மலைப் பகுதிகளிலும் இனி மகளிர் கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம்!

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட போக்குவரத்து துறைச் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

> தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமன்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KſW) நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கடந்த 1997 ஆம் ஆண்டில் மறைந்த முன்னள் முதல்வர் கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (Mini bus) திட்டம் தமிழ்நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய வேகமாக ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழத்தில் விரிவுபடுத்தப்படும்.

இந்த வரவு - செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்துக் கட்டண மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1,521 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம் என்ற மகத்தான திட்டமும் ஒன்று. சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 சதவீதத்திலிருந்து 65 சதவிதமாக உயர்ந்துள்ளது.

தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும், திருநங்கைகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்திற்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE