‘வாழ்வாதாரமே இல்லாததால்...’ - திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரி கர்ப்பிணி மனு

By ஜி.செல்லமுத்து

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் வழக்கத்தை காட்டிலும் பெண்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு அளித்தனர். இதில் திருச்சி மாவட்டம் புத்தா நத்தம் கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கலைச் செல்வி (26) மனு ஒன்றை அளித்தார்.

அதில், "எனக்கு 3 வயதில் மகனும், தற்போது 7 மாத கர்ப்பிணியாகவும் உள்ளேன். கடந்த டிசம்பர் மாதம் தனது கணவர் முருகேசனை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர்கள் கொலை செய்துவிட்டனர். அதன்பிறகு எனது கணவர் குடும்பத்தினர் என்னை கண்டுகொள்ளவில்லை. தற்போதைய நிலையில் நான் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன்.

ஆகையால், அரசு எனக்கு வேலையோ அல்லது ஏதாவது ஓர் உதவியோ செய்து தருமாறு வேண்டும். இல்லையென்றால்தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஏதாவது ஒரு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவரிடம் உறுதியளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE