சென்னை: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் ஏற்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தொகுதிக்கு ரூ.20,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.