சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம் என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கிய நாள் பிப்.21. இதன்படி அன்றைய தினம் 7-ம் ஆண்டு தொடக்க நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை 10 மணியளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கொடி ஏற்றிவைத்து தொண்டர்களிடையே கட்சித் தலைவர் சிறப்புரையாற்ற உள்ளார்.
இதில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும்.
வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.