இண்டியா கூட்டணிக்கு மக்கள் விடுதலை கட்சி ஆதரவு

By செய்திப்பிரிவு

கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை கட்சியின் மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சி தலைவர் ஜெ.சிதம்பர நாதன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் பாசிசத்தை கட்டமைப்பதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

சுரண்டலை உறுதிப்படுத்துவதற்காக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட ஒற்றை கலாசாரத்தை புகுத்தும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாஜக விஷயத்தில் திமுக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனவே, திமுக அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE