இணைந்து பயணிப்போம்! - செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம். இண்டியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் பொறுப்பேற்பார். தமிழக காங்கிரஸுக்கான கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அதேவேளையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE