நாகப்பட்டினம்: நாகை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மண்டலச் செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் நாகை அருகே மஞ்சக்கொல்லையில் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன் முன்னிலை வைத்தனர். மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள், வேட்பாளர் மு.கார்த்திகாவை (34) அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, மு.கார்த்திகா பேசியபோது, “நாகை மக்களவைத் தொகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி. அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வு காண்பேன். நாகை மாவட்ட மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார். கட்சி நிர்வாகிகள் ராஜேஷ், ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் விளாங்குறிச்சியைச் சேர்ந்த மு.கார்த்திகா, பி.இ. பட்டதாரி. இவரது கணவர் ப.முருகசந்திரகுமார். முதுநிலை பொறியாளர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா, நாம் தமிழர் கட்சியில் தலைமை தேர்தல் பரப்புரையாளராகவும், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.