அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் மனு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது. உயர் நீதிமன்றமும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் 2-வது முறையாக ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். என் கைது சட்டவிரோதம். வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங்க் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார். இதையடுத்து, ''லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 28-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE