பாஜகவின் அராஜக போக்கை காட்டுகிறது - வங்கிக் கணக்குகள் முடக்கத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை முடக்கியிருப்பதற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை, காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக வருமானத்தை வாரி குவித்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (16.02.2024) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கொடுத்ததிலிருந்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் திரள்நிதி சேர்த்த வங்கிக் கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்று உறுதியாக தெரிந்ததால், இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாஜக. இது ஆளும் பாஜக அரசின் ஆணவ, அராஜகப்போக்கைக் காட்டுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் பாஜக-வின் அரசியல் பழிவாங்கும் போக்கை கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு தக்க பதிலடி தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE