கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி. இத்தொகுதியின் தற்போதைய எம்.பியாக கவுதம சிகாமணி உள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான இவர், மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புகேட்டு வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், தனது மகனை அரசியலில் நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனவே, இம்முறையும் கள்ளக்குறிச்சியில் தனது மகனுக்கு போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஆனால், தொகுதியில் உள்ள திமுகவினரோ கடந்த நான்கரை ஆண்டுகளில் கவுதமசிகாமணி எம்.பி கட்சியினரைக் கண்டு கொள்ளாமலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கவுதம சிகாமணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே இம்மாவட்டத்தை நிர்வகிக்க, அமைச்சர் எ.வ.வேலுவை திமுக தலைமை நியமித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள் வருகை தருவதையே பொன்முடி தவிர்த்து விட்டார். இதைத் தொடர்ந்து மாவட்டத் தில் உள்ள கழக கண்மணிகளுக்கும் கவுதம சிகாமணிக்கும் இடையிலானதொடர்பு அறவே அற்றுப்போயுள்ளது.
» ‘மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வேண்டும்’
» முதல் கட்சியாக விருப்ப மனு வாங்கும் திமுக: விண்ணப்பம் ரூ.2,000; கட்டணம் ரூ.50,000
ஊழல் வழக்கால் பிரச்சினை கவுதமசிகாமணி மீதான ஊழல் புகார்களை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யக் கூடும் என்பதால், அவருக்கு சீட் வழங்க வேண்டாம் என்று கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஆனாலும், கவுதமசிகாமணியின் ஆதரவாளர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்திருக்கிறார் என்று பட்டியிலிடுகின்றனர். சாதக பாதகத்தை ஆராய்ந்து கள்ளக்குறிச்சியை கவுதமுக்கு கொடுக்கலாமா..? அல்லது கூட்டணிக் கட்சிக்கு விட்டுத்தரலாமா என கட்சித்தலைமை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.