கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்கள், உதயசூரியன் சின்னத்தில் களம் கண்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, மதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட மனுவின் நகலை வழங்கி, மதிமுக வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.