போலீஸ் பாதுகாப்பு கோரிய சூர்யா சிவா மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

மதுரை: பாஜக ஓபிசி அணி பொதுச் செயலாளர் சூர்யா சிவா போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாஜக ஓபிசி அணி பொதுச் செயலாளராக உள்ளார். இவர் போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றகிளையில் தாக்கல் செய்த மனு: பாஜகவில் சேர்ந்தது முதல் எனக்கு செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட என் கார் மீது பேருந்தை மோதச் செய்து கொலை செய்ய முயன்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிப் பணியாற்றி வருகிறேன். தற்போது என்னை சிலர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களது நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் நம்பி செல்வன் வாதிடுகையில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதி, ‘மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியும்? இப்போதெல்லாம் ஒருவர் 2 காவலர்களை பாதுகாப்புக்காக உடன் வைத்துக் கொள்வது வழக்கமாக மாறிவிட்டது’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, சூர்யா சிவாவின் வழக்கறிஞர் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE