மதுரை மாநகராட்சியில் புகுந்த ‘சிண்டிகேட்’ அரசியல் - 40 இனங்கள் ஏலம் ரத்து பின்னணி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் மாட்டுத் தாவணி பேருந்து நிலைய வாகனக் காப்பகம், காய்கறி மார்க்கெட் நுழைவுக் கட்டண வசூல், முனிச்சாலை தினசரி மார்க்கெட் கட்டண வசூல், ஆனையூர் வாரச் சந்தை கட்டண வசூல், தெற்கு வெளி வீதி மீன் மார்க்கெட், மாநகராட்சி புல் பண்ணை உட்பட 40 முக்கிய வருவாய் இனங்களுக்கு பிப். 7-ம் தேதி ஏலம் நடக்கவிருந்தது. ஆனால், பிப்.6-ம் தேதி இரவு, திடீரென ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஏல ரத்துக்கும் மாநகராட்சி ஆணையர் மதுபாலனின் இடமாற்றத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வருவாய் இனங்கள் ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடப்படும். ஏலம் எடுப்போர் அதற்கான தொகையை முதல் ஆண்டு தொடக்கத்திலேயே செலுத்த வேண்டும். 2-வது ஆண்டில் கூடுதலாக 5 சதவீதமும், 3-வது ஆண்டில் கூடுதலாக மேலும் 5 சதவீதமும் சேர்த்து ஏலத் தொகையைக் கட்டி புதுப்பிக்க வேண்டும். மாநகராட்சிகளில் இந்த விதிமுறைதான் கடைப் பிடிக்கப் படுகிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் சில வருவாய் இனங்களுக்கு மட்டும் ஏலம் நடைபெறும்.

மற்ற இனங்களை ஏலம் எடுப்போருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அல்லது தொடர்ந்து நடத்த முடியாவிட்டால் 2-வது, 3-வது ஆண்டு ஏலத் தொகையை கட்டாமல் பாதியில் விட்டுச் சென்று விடுவார்கள். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் 40 வருவாய் இனங்களுக்கான ஏல அறிவிப்பு வெளியான போது ஏலத் தொகையை முதல் ஆண்டு தொடக்கத்தில் கட்டுவதோடு 3 ஆண்டுகளுக்கான மொத்த ஏலத் தொகையை வங்கியில் இருப்பு வைத்து, வங்கிக் காப்புறுதி ஆவணம் மூலம் மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆணையராக இருந்த மதுபாலன், மாநகராட்சிக்கு முதல் முறையாக பணியாற்ற வந்தவர் என்பதால் அதிகாரிகள் சிலர் செய்த தவறுகளால் ஏற்பட்ட குளறுபடிகளை அவர் கவனிக்காமல் விட்டு விட்டார். ஆளும் கட்சி புள்ளிகளே மற்றவர்கள் பெயரில் ஏலம் எடுத்து நடத்துவர். மாநகராட்சியின் இந்த புதிய நடைமுறையால் அதிருப்தியடைந்த அவர்களில் சிலர், இந்த ஏலத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இதில் உயர் நீதிமன்றம் ஏலம் நடத்தத் தடை விதித்தது.

இதோடு மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் ஏற்கெனவே ஆளும் கட்சியினருக்கும், ஆணையராக இருந்த மதுபாலனுக்கும் இடையே நீடித்த பனிப்போரும் சேர்ந்து கொண்டது. ஆளும்கட்சி பிரமுகர்கள், பல அணிகளாகச் செயல்பட்டாலும், ஒப்பந்தம் எடுப்பதில் ‘சிண்டிகேட்’ அமைத்து ஒரே அணியாகச் செயல்படுவர். தங்களுக்கு சாதகமான ஆணையர் வந்தால் அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு ஏலத் தொகையை அதிகரிக்க விடாமல் செய்வர்.

ஆனால், ஆணையராக இருந்த மதுபாலன், மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆளும் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி ஏலத் தொகையை அதிகரித்ததோடு ‘சிண்டி கேட்’ அமைக்க விடாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தார். அதனாலேயே மதுபாலன் இடமாற்றம் செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், வரி வருவாய் ஏலம் நின்றுவிட்டால் மாநகராட்சியே அதை ஏற்று நடத்த வேண்டும். ஆனால், மாநகராட்சியில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் கடைசியாக ஏலம் எடுத்தோரைக் கொண்டே தொடர்ந்து நடத்தப்படும். அப்போது அவர்கள் கொடுக்கும் தொகையை மாநகராட்சி பெற்றுக் கொள்ளும். இது தனியாருக்கு மிகப்பெரிய லாபம். அதேநேரம் மாநகராட்சிக்கு பெரும் நிதியிழப்பு. இதையும் தடுக்கவே ஆணையர் மதுபாலன் நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE