‘ஒரு மகன் போனாலும் பல மகன்களும், மகள்களும் எனக்கு இருக்கிறார்கள்’ - சைதை துரைசாமி உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது மகனை தகனம் செய்த பிறகு மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார். “இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியில், அரசின் உயர் பதவியில் ஐஏஎஸ், ஐஆர்எஸ் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளனர். எனது ஒரு மகன் போனாலும் எனக்கு பக்கபலமாக என்னுடைய இத்தனை மகன்கள், மகள்கள் இருக்கின்றார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சக மனிதனுக்காக வாழ வேண்டும். சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு விடக் கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அரசுப் பணியில் அமர வைப்பதும் எனது லட்சியம். இதனை எனது மகன் மரணத்தில் நான் உறுதி ஏற்கிறேன். அதை நோக்கி பயணித்து, சக மனிதனுக்காக வாழ்ந்து, என மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்த சேவையை அபிவிருத்தி செய்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நான் மனம் கலங்க மாட்டேன். காரணம், இத்தனை மகன்களை, மகள்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அதனால் இன்னும் வலிமையோடு பயணிப்பேன். அதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பாதையில் நான் பயணிப்பேன் என சூளுரைக்கிறேன்” என அவர் தெரிவித்தார். இந்த பயணத்துக்கு போக வேண்டாம் என சொன்னதாகவும். 'இதுவே கடைசி' என வெற்றி துரைசாமி சொல்லிவிட்டு சென்றதாகவும் சைதை துரைசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE