தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கக் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காஞ்சிபுரம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரியளவில் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரித்து தொழிற்சாலைகளை தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. அதே நேரத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவது, தென் மாவட்டங்களில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்களை கொண்டு வருவது போன்ற விவகாரங்கள் அரசின் கொள்கை சார்ந்தது.

எங்கு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பதை தமிழக அரசும், முதலீட்டாளர்களும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE