சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை.சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்
வெற்றி துரைசாமி மறைவு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், “ சென்னை மாநகர முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை.சா.துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45) உடல் நேற்று (12.02.2024) சட்லஜ் நதியில் எடுக்கப்பட்ட நெஞ்சை பிளக்கும் செய்தி அறிந்து வேதனையுற்றோம். வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலம், மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை படம் எடுக்க சென்ற நேரத்தில் கடந்த 04.02.2024 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வெற்றி துரைசாமி பயணித்த காருடன் சட்லஜ் நதியில் தூக்கியெறிப்பட்டார்.
கடந்து ஒன்பது நாட்களாக அவரது உடலை தேடி, நேற்று திங்கள் கிழமை கண்டெடுத்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக சைதை துரைசாமியும், அவரது குடும்பத்தினரும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தில் சொல்லொணா வேதனையில் மூழ்கி கிடந்தனர். அவர்களது துயரில் பங்கேற்று ஆற்றுப்படுத்த வார்த்தை இல்லை. காலம் தான் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.
வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.